.

Tuesday, August 31, 2010

BPO பயிற்சியும்.. வேலையும்.. அதன் அரசியலும்..

BPO வேலைகளுக்கு எப்படி இண்டர்வியூ நடக்குதுன்னு முந்தைய பதிவுல சொன்னேன்.. ஆஃபர் வாங்கியாச்சு.. அடுத்து..

ஜாய்னிங் டே..

கொஞ்சம் பெரிய கம்பெனிகள்ல நாம ஆஃபர் வாங்கியிருந்தோம்னா.. அன்னைக்கு முழுக்க இண்டக்சன் புரோகிராம் நடக்கும்.. கத்தை கத்தையா பேப்பரக் குடுத்து எல்லாத்தையும் ஃபில் பண்ணச் சொல்வாங்க.. நாமளும் வீரமாவும், பெருமிதமாகவும் ஃபில் பண்ணிக்கொடுப்போம்..

நெக்ஸ்ட் ட்ரைனிங்..

நாம செய்யப்போற வேலைக்கு ஏத்தமாதிரி ஒருமாசமோ அல்லது ஒருவாரமோ ட்ரைனிங் தருவாங்க.. ரொம்ப ஜாலியாப் போகும் அந்த புரோகிராம்.. பெரும்பாலும் வர்ற ட்ரைனர்ஸ் அப்படியே நம்ம மனசுல நின்னுடுவாங்க.. சிரிக்க சிரிக்க பேசி.. விளையாட்டு காமிச்சு ட்ரைனிங்கை ரொம்ப நல்லா கொண்டு போவாங்க.. அந்தக் கம்பெனியில நாம ரொம்ப மகிழ்ச்சியா இருந்த தருணம் அதுமட்டும்தான்னு பின்னாடி தெரிஞ்சுக்குவோம்..

நெக்ஸ்ட் புரொடெக்சன் ஃப்ளோர்..

புரொடெக்சன் ஃப்ளோருக்குள்ள வர்ற ஒவ்வொருத்தருக்கும் சொல்றேன்.. கரெக்டா ஆறுமாசம் பாருங்க.. உங்களுக்கு அங்க ஏதாவது முன்னேற்றம் இருக்கான்னு அதுக்குள்ள தெரிஞ்சுடும்.. அப்படி ஏதும் இல்லைங்கற பட்சத்துல அடுத்த வேலைக்கு அதைவிட நல்ல சம்பளத்துல ஜம்ப் ஆயிடறது நல்லது.. பரவாயில்லை அப்படிங்கற நினைப்பை உங்க மனசுல விதைச்சிட்டிங்கன்னா அது ஒரு போதைப் பழக்கத்துக்கு நீங்க அடிமையான மாதிரிதான்.. செய்ற வேலையே மறுபடியும் மறுபடியும் செய்து செய்து உங்க மூளை அப்படியே மழுங்கன மாதிரி ஆயிடும்..

ஓகே.. நம்ம மேட்டருக்கு வருவோம்.. உங்களுக்குன்னு ஒரு டீம் பிரிச்சு.. உங்க டீம் லீடர், பிராஜெக்ட் மேனேஜர்.. எல்லாரையும் அறிமுகப்படுத்தி வேலையில உக்கார வைச்சிடுவாங்க.. ட்ரைனிங்லயே நீங்க ப்ளோர்ல எப்படி நடந்துக்கனும்.. அங்க என்ன என்ன டைமிங், ரூல்ஸ் ஃபாலோ பண்றாங்க.. புரொடக்சன் ஃப்ளோருங்கறது ட்ரைனிங் மாதிரி இருக்காது அப்படி இப்படின்னு ட்ரைனர் அடிக்கடி நம்மளை பயமுறுத்தி வைச்சிருப்பார்.. அதுனால ஒரு பயத்தோடவே வேலையை ஆரம்பிப்போம்..

இந்த நிறுவனங்கள்ல உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கற நேரம் எப்பவுமே ரெண்டுங்கெட்டான் நேரமாத்தான் இருக்கும்.. ஏன்னா நாம பிராஜெக்ட்டுக்கு ஏத்தமாதிரி யூ.எஸ்., யூ.கே., ஆஸ்திரேலியா., நேரத்துல வேலை செய்யனுமாம்..

இதுல ரொம்ப கொடுமை ஆஸ்திரேலிய நேரத்துல வேலை செய்றதுதாங்க.. காலையில 4 மணிக்கு பிக்-அப்புக்கு வண்டி அனுப்புவாங்க.. யூ.எஸ் நேரத்துல சிக்கிட்டீங்கன்னா அப்புறம் நீங்க பகலைப் பார்க்கவே முடியாது.. தூங்கிட்டே இருக்க வேண்டியதுதான்..
 யூ.கே டைமிங்னா நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி.. மதியத்துல இருந்து நைட் வரைக்கும் வேலை பார்ப்போம்..

சரி இப்போ வேலையைப் பார்க்க ஆரம்பிப்போம்.. ஒவ்வொரு டீம் லீடருக்கும் எடுபிடி வேலையா.. அதாவது அசிஸ்டெண்டா ஒருத்தர் இருப்பார்.. அவர்தான் நமக்கு வேலை எல்லாம் அசைன் பண்ணுவார்.. கம்பெனியோட C.E.O கூட அமைதியா இருப்பார்.. இந்தப் பசங்க இருக்காங்களே பயங்கர லொல்லு பண்ணுவாங்க.. நாமதான் புதுசாச்சே ஒன்னும் புரியாததால அமைதியா வேலை பார்க்க வேண்டியதுதான்..

நம்ம செய்ற வேலையைப் பத்தின ஃபீட்பேக் அடிக்கடி கிளையண்டுங்க கிட்டயிருந்து வரும்.. நாமலும் பயங்கர சின்சியரா வேலை பார்த்துட்டு இருப்போம்.. ஆனாலும் வாரம் ஒருமுறையாவது மொத்தமா எல்லாத்தையும் ஒரு சின்ன ரூம்ல நிக்கவைச்சு.. நீங்கல்லாம் சரியா வேலை செய்றதில்லை.. ஆச்சா..போச்சான்னு.. நம்ம டீம் லீடர் கத்துவார்.. இதுல நல்லா வேலை செய்த நம்ம பேரைச் சொல்லாம.. சிலபேர் மட்டும் நல்லா வேலைப் பார்க்கறாங்கன்னு பொத்தாம்பொதுவா சொல்வார்.. இதுல என்னன்னா நல்லா வேலை செய்தவங்களுக்கு சரியான அங்கிகாரம் கிடைக்கறதில்லை.. நல்லா வேலை செய்யாதவங்க.. ஓஓஓ.. அப்ப நம்மளைத் திட்டலை போலன்னு போயிட்டே இருப்பாங்க..

அடுத்த ரெண்டு நாள்லயே திரும்பவும் அந்த சின்ன அறைக்கு கூப்பிட்டு போவாங்க.. நாமலும் போச்சுடா இன்னைக்கும் வாங்கப்போறோம்னு நினைச்சிட்டே போய் நிப்போம்.. நம்ம டீம் லீடர் வந்து.. நீங்கெல்லாம் சூப்பரா வேலை செய்றிங்கன்னு கிளையண்ட் கிட்டயிருந்து மெயில் வந்திருக்கு.. உங்களை மாதிரி ஒரு டீமை இதுவரை நான் ஹேண்டில் பண்ணினதில்லை.. நீங்கள்லாம் அப்படி..இப்படின்னு புகழோ புகழ்ன்னு புகழுவார்.. இப்பவும் நல்லா வேலை செய்த நாம.. பேபேன்னு பார்த்துட்டு நிப்போம்..

ஆக்சுவலா அவங்களோட சூழ்ச்சி என்னன்னா.. பாகுபாடு பார்க்காம எல்லாருக்கும் ஒருமாதிரியான மெண்டல் பிரசர் குடுத்துட்டே இருக்கனும்.. அப்போதான் எல்லாரும் பயத்தோட வேலைப் பார்ப்பாங்க இல்லையா.. அதனால திட்டறதும், புகழ்றதும் ரொட்டீனா நடந்துட்டே இருக்கும்..

சரி.. இந்தப்பதிவு கொஞ்சம் நீளமாயிட்டதால.. நம்மள்ல நல்லா வேலைப் பார்த்தவங்களை டீம் லீடர் ஆக்கிடலாம்..

அடுத்த பதிவுல டீம் லீடரோட பார்வையில இருந்து நம்ம டீமை வழிநடத்தப் போறோம்.. என்ன சொல்றீங்க..

பாகம் 3 - இங்கே கிளிக் பண்ணுங்க

Monday, August 30, 2010

BPO வேலையில் சேரலாம் வாங்க..


BPO வேலைகள் பத்தி நிறையப் பேருக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. இந்த வேலையில் எனக்கு மூன்று ஆண்டு அனுபவம் இருக்குங்க.. அதனால புதுசா இந்த வேலைக்கு இண்டர்வியூக்கு வந்து.. வேலை வாங்கறவங்க படற கொடுமைகளைப் பத்தி எனக்கு தெரிஞ்சதை சொல்லலாம்னு வந்திருக்கேங்க..

இந்த வேலை எதைப்பத்தியதுன்னு தெரியாதவங்களுக்கு இந்த விளக்கம்.. தெரிஞ்சவங்க அடுத்த பத்திக்கு போயிடலாம்.. சுருக்கமா சொல்லனும்னா அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மாதிரி நாடுகள்ல இருக்கறவங்க தங்களோட வேலைகளை இந்தியாவுக்கு அனுப்பி குறைஞ்ச விலைகொடுத்து வேலை வாங்கிக்கறாங்க.. நம்ம ஆளுங்களும் மாங்கு மாங்குன்னு ஒர்க் பண்ணி அனுப்புவோம்.. அவ்லோதான்..

இந்த வேலைக்கு ஆள் எடுக்கறவங்க.. மூன்று தகுதிகளை நம்பகிட்ட எதிர்பார்ப்பாங்க..

1. எந்த நேரத்திலும் வேலை பார்க்கணும்
2. நல்ல பேச்சுத்திறமை அல்லது ஆங்கிலப் புலமை
3. நல்ல தட்டச்சுத் திறமை

இந்த அடிப்படைத் தகுதிகள் இருக்கறவங்க இண்டர்வியூக்கு வரலாம்னு சொல்வாங்க.. இப்படியெல்லாம் கேட்டா நாம பயந்துடுவோமா.. நாமளும் போவோம் என்ன சொல்றிங்க.. போற இடத்துல ஒரு அழகான HR இருப்பாங்க.. வர்றவங்க எல்லாத்தையும் ரிசீவ் பண்ணி ஒரு அறையில உக்கார வைச்சிட்டு போயிடுவாங்க.. கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் சேர்ந்துட்டே இருக்கும்.. அந்த HR திடீர் திடீர்னு உள்ள வந்து எட்டிப் பார்ப்பாங்க.. நம்ம பக்கத்துல வந்து அவங்களுக்கு வந்த ஏதாவது ஃபோன்காலை அட்டென் பண்ணி ஆங்கிலத்துல பேசு பேசுன்னு பேசுவாங்க.. நாலைஞ்சு பேரு ஒன்னா சேர்ந்து ஏதாவது சீரியஸ் டிஸ்கசன் பண்ணுவாங்க.. இதெல்லாம் பார்த்தா புதுசா இண்டர்வியூக்கு வந்திருக்கவங்களுக்கு பீதியைக் கிளப்பும்..

காலையில இண்டர்வியூ போனோம்னா ஒரு 12 மணி வரைக்கும் வெயிட் பண்ண வைக்கறதுதான் இவங்களோட முதல் சம்பிரதாயம்.. அதுக்குள்ள நாம டென்சன் ஆகி, ரிலாக்ஸ் ஆகி, அப்புறம் சலிப்பாயிடுப்போம்..
இப்போ நம்ம அழகான HR இதுவரைக்கும் வந்தவங்க ரெஸ்யூம் எல்லாத்தையும் மொத்தமா கையில வச்சிக்கிட்டு ஒரு அறிமுகம் குடுப்பாங்க.. ரொம்ப திமிரான ஆளா இருந்தாங்கன்னா அறிமுகம் எல்லாம் இல்லாம.. நேரடியா அவங்க வைச்சிருக்கிற ரெஸ்யூல இருக்கிற பேரை வாசிச்சு "டெல் மீ அபவுட் யூவர்செல்ஃப்"னு கேப்பாங்க..

இந்த ரவுண்டுல பெங்களூர் பசங்களும், வேற மாநிலத்து பசங்களும் பின்னியெடுப்பாங்க.. நம்ம பசங்க பெரும்பாலும் தமிழ் மீடியம் படிச்சுட்டு வந்திருப்போமா... ஆஆஆன்னு பார்த்துட்டு இருப்போம் அவங்க பேசறதை.. ஆனா இங்க என்ன டிவிஸ்டுனா அப்படி சூப்பரா பேசினவங்கள்ல ஒன்னு ரெண்டு பேரை மட்டுமே எடுத்திட்டு நம்மளை எல்லாம் செலக்ட் பண்ணிடுவாங்க.. என்னடா இது!! அப்படின்னு ஆச்சரியப்பட்டுட்டே நாமலும் நெக்ஸ் ரவுண்ட் போயிடுவோம்..

முதல் ரவுண்ட் முடியறதுக்கே 2.30, 3.00 மணி ஆயிடுமா.. நம்மள்ல நிறையப் பேரு இண்டர்வியூ ஆர்வத்துல காலையில கூட சாப்பிடாம நேரா வந்திருப்போம்.. இப்போ அடுத்த ரவுண்டுக்கு செலக்ட் ஆனவங்களுக்கு மதிய சாப்பாடும் கட்.. இருந்தாலும் பரவாயில்லை.. வேலை கிடைச்சா நல்லதுதானேன்னு நம்மளைத் தேத்திக்கிட்டு தெம்பா உக்காந்துடுவோம்..

அடுத்த ரவுண்டு ஆப்டிட்யூட் டெஸ்ட் அல்லது டைப்பிங் டெஸ்ட் வைப்பாங்க.. நம்மள்ல பெரும்பாலானவங்க இந்த ரவுண்டுலதான் ஆப்பு வாங்குவோம்.. ஆனாலும் சில நல்ல HR ஆளுங்க நம்மளை தேத்தி அடுத்த ரவுண்டுக்கு அனுப்பறதும் அபூர்வமா நடக்கும்.. அப்பவே இந்த வேலையை வாங்கிட்டா மாதிரி ஒரு ஃபீல் வரும் பாருங்க.. ஆனா இந்த மாதிரி எல்லாம் அபூர்வமாதான் நடக்கும்..

ரொம்ப அவசரமான தேவைகள்னா பெரும்பாலும் அடுத்த ரவுண்டு HR அல்லது பிராஜெக்ட் மேனேஜர் ரவுண்டா இருக்குங்க.. இந்த ரவுண்டுக்குப் போயிட்டா அவங்க கேக்கற கேள்விகளுக்கு சிரிச்சிட்டே பதில் சொல்லலாம்.. கேசுவலா இருக்கறது முதல்ல கஷ்டமாத்தான் இருக்கும்.. அப்புறம் பழகிடலாம்.. அவங்க அனுபவச் சான்றிதழ் எல்லாம் வச்சிருக்கியான்னு கேட்கும்போது.. நம்மகிட்ட இல்லைன்னாலும் கூட குடுக்கறேன்னு சொல்லிடனும்.. இல்லைனா இந்த வேலை கோவிந்தாதான்.. அதெல்லாம் அப்புறம் ரெடி பண்ணிக்கலாம்னு வைச்சிக்கங்க..

அப்புறம் என்ன ஆஃபர் லெட்டர் வாங்கியாச்சு.. வெளிய வரும்போது எப்படியும் குறைஞ்சது நைட் 8 மணி ஆயிருக்கும்.. வேலையோட வந்தா அன்னைக்கு முழுக்க பட்டினி கிடந்ததுக்கு யூஸ்புல்லா இருக்கும்.. இல்லைனா அதைப்பத்தியெல்லாம் நினைக்காம போயிட்டே இருக்க வேண்டியதுதான்..

ஹே ஹேய்.. நாம வேலை வாங்கிட்டோல..

நெக்ஸ்ட் ஜாய்னிங் டே.. ஹா ஹா ஹா.. நம்ம கெட்டகாலம் ஆரம்பமாயிடுச்சு.. அடுத்து என்ன நடக்கும்னு சீக்கிரம் வந்து சொல்றேன்..

நன்றி..

பாகம் 2 - இங்கே கிளிக் பண்ணுங்க..

பாகம் 3 - இங்கே கிளிக் பண்ணுங்க..

Friday, August 27, 2010

எந்திரன் (2001) - திரை விமர்சனம்.

நார்மலா ரோபோன்னாலே மனசங்க தயாரிக்கற ஒரு இயந்திரம்தானே.. அதுக்கு எப்படி ஃபீலிங்க்ஸ் வரும்.. அன்பு வரும்.. அப்படிங்கறதைப் பத்தி A.I. Artificial Intelligence (2001) அப்படிங்கறப்படத்தில அருமையா காட்டியிருப்பாங்க..

படம் வருங்காலத்துல ஏதோ ஒரு வருசத்துல இருந்து ஸ்டார்ட் ஆகுதுங்க.. டெக்னாலஜி எல்லாம் நல்லா டெவலப்பாகி நிறைய வகையான ரோபோக்களை பலவிதமான பயன்பாடுகளுக்கு தயாரிக்கறாங்க.. அதுல ஒருவகை தங்களோட உரிமையாளர்கள்கிட்ட அன்பு செலுத்தற சின்னப்பசங்க ரோபோ.. அப்படி தயாரிக்கப்படற ரோபோவை சோதனை முயற்சியா.. அந்த நிறுவனத்துல வேலை செய்ற ஹென்ரின்னு ஒருத்தருக்கு கொடுக்கறாங்க.. அந்த ஹென்ரியோட மகன் கோமா மாதிரி ஒரு நோய்ல இருக்கான்.. அவன் பிழைக்கறதும் ரொம்ப கஷ்டம்னு சொல்றாங்க.. அதனால இந்த ரோபோ தன்னோட மனைவிக்கு ஆறுதலா இருக்குமேன்னு வீட்டுக்கு எடுத்துட்டுப் போறார்.. அந்த ரோபோ பேர் டேவிட்.. ஹென்ரியோட மனைவிதான் தன்னோட அம்மான்னு அந்த ரோபோக்கு புரோகிராம் ஆக்டிவேட் பண்ணறாங்க.. டேவிட்டும் அம்மா மேல ரொம்ப பாசமா இருக்கு..

திடீர்னு அந்த தம்பதிகளோட மகன் குணமாகி வந்துடறான்.. இப்போ டேவிட் இருக்கறது அந்தப் பையனுக்கு புடிக்கல.. சில பிரச்சினைகள் ஏற்படுது.. அதனால டேவிட்டை ஒரு காட்ல கொண்டு போய் விட்டுடறாங்க அந்தம்மா.. தான் ஒரு ரோபோவா இருப்பதால்தான இங்க இப்படி அம்மா விட்டுட்டாங்க.. நாமளும் மனுசனாகனும்னு நினைச்சிட்டு.. அது ஒரு தேவதையால முடியும்னு அந்த தேவதையைத் தேடிப்போகுது அந்த டேவிட் ரோபோ..

இந்தத் தேடுதல்ல நிறைய பிரச்சினைகளை சந்திக்குது டேவிட்.. அப்புறம் கடல்ல மூழ்கிப்போயிருக்கிற நியூயார்க் நகரத்துலதான் அந்த தேவதை இருக்குன்னு தகவல் தெரிஞ்சு அங்க போகுது.. அங்க தன்னை உருவாக்குன ஆளையும்.. தன்னை மாதிரி பல ரோபோ அங்க அடுக்கி வைச்சிருக்கறதையும் பார்க்குது.. அப்புறம் அங்கயிருந்து எஸ்கேப்பாகி.. கடலுக்கு அடியில மூழ்கிப்போன ஒரு தீம்பார்க்குல தேவதையோட சிலை இருக்கறதைக் கண்டுபிடிக்குது.. அதை உண்மையான தேவதைன்னு நம்பி தன்னை மனுசனா மாத்து அப்படின்னு ரொம்ப டீப்பா வேண்டிக்க ஆரம்பிக்குது..

வேண்டுதல் நிக்காம தொடர்ந்து வேண்டிகிட்டே இருக்கு டேவிட்.. இப்படியே காலம் கடந்து மனுச இனமே அழிஞ்சு போயி.. கடல் எல்லாம் உறைஞ்சு போயி.. ஐந்தாவது மில்லினியத்துக்கு காலத்தை கொண்டு போறாங்க..

சிலிக்கானால ஆன சூப்பர் ரோபோட்டுகள்தான் அப்போ வாழ்ந்துகிட்டு இருக்கு.. அதுங்களுக்கு ஒருத்தர் மூளையில என்ன இருக்குன்னுட்டு தெரிஞ்சுக்கிற சக்தி இருக்கு.. அதுங்க கடலுக்கு அடியில உறைஞ்சு போன டேவிட் ரோபோவைக் கண்டுபிடிச்சு.. ஆக்டிவேட் பண்ணி.. அதோட கதையைத் தெரிஞ்சுகுதுங்க..

டேவிட்டுக்கு தங்களால உதவமுடியும்.. அதாவது டேவிட்டோட அம்மாவை இப்போ உயிர்ப்பிக்க முடியும்.. ஆனா ஒரே ஒருநாள் மட்டும்தான் அவங்க உயிரோட இருப்பாங்க.. அப்படின்னு அந்த சூப்பர் ரோபாட்டுகள் டேவிட்டுகிட்ட சொல்லுதுங்க.. சொன்னமாதிரியே டேவிட்டோட அம்மாவை உயிர்பிச்சு டேவிட்கிட்ட குடுக்குதுங்க அந்த சூப்பர் ரோபாட்டுகள்.. இப்போ ஒரு நாள் முழுக்க டேவிட் தன்னோட அம்மாவை நல்லா பார்த்துக்குது.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்னு அந்தம்மா டேவிட்கிட்ட சொல்றாங்க.. அந்த ஒருவார்த்தையைக் கேக்கறதுக்குத்தான் டேவிட் இவ்வளவு கஷ்டமும் பட்டது.. நைட் ஆயிடுது.. அந்தம்மா தூங்க ஆரம்பிக்கறாங்க.. டேவிட்டும் சந்தோசத்தோட நிம்மதியா கண்ணை மூடுது..

ஸ்டீவன் ஸ்பில்பர்க் இயக்கின படங்கறதாலதான் இந்தப் படத்தைப் பார்த்தேன்..

படத்துல நிறைய ரோபோக்களைத்தான் காட்டறாங்க.. நிறைய இடங்கள்ல படம் போரடிச்சுது..

படத்துல ஹீரோ ரோபோவா நடிச்சிருக்கற சின்னப்பையனை பெரும்பாலும் எல்லாருக்கும் தெரியும்.. சிக்ஸ்த் சென்ஸ் படத்துல வர்ற பையன்தான்.. இந்தப் படத்துலயும் நல்லா நடிச்சிருக்கான்..

அந்தப் பையன் தேவதையைத் தேடறதுக்காக வெளிப்படுத்தியிருக்கற நடிப்புக்காக படம் பார்க்கலாம்..


திகில் திருமணப் பயணம்

போனமாசம் நானும் என்னோட நண்பர்களும்.. எங்களோட இன்னொரு நண்பனோட கல்யாணத்தை அட்டென் பண்றதுக்காக வால்பாறைல இருக்கற ஒரு கிராமத்துக்குப் போயிருந்தோம்.. கிராமம்னா சும்மா இல்ல.. ஆல்மோஸ்ட் ஒரு காட்டுப் பிரதேசம் அது.. உண்மையிலயே எப்பவுமே மனசுல நிக்கற கல்யாணம் அது..

வால்பாறைங்கறது ஒரு ஹில்ஸ் ஸ்டேசன்ங்க.. இது பொள்ளாச்சியில இருந்து 64 கிலோமிட்டர் தூரத்துல இருக்கு.. மலைப்பாதை ஆரம்பிச்சதில இருந்து மொத்தம் 42 ஹேர்பின் பெண்டுகள் இருக்கு.. அதனால இங்க அரசாங்க பஸ்ல வந்தோம்னா பெண்டு கழண்டு போயிடும்ங்கறது நிச்சயம்.. அதனால நண்பர்கள் எல்லாரும் எங்க ஊர் பழனியில இருந்து பைக்லயே போனோம்.. ஏற்கனவே நாங்க அடிக்கடி கொடைக்கானலுக்கு பைக்ல போகற பழக்கம் இருக்கறதால எங்களுக்கு அந்த ட்ராவல் பெரிசா இல்ல..

மலைப்பாதை ஆரம்பம்னு போர்டு பார்த்தாச்சு.. எல்லாரும் உற்சாகமா வளைச்சு வளைச்சு பைக் ஓட்டிட்டு போயிட்டு இருந்தோம்.. எங்களுக்கு மலைப்பாதைகள்ல பைக் ஓட்டறதுல ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ்.. அதனால உற்சாகமா போயிட்டே இருந்தோம்.. ஒரு பத்து பெண்டு தாண்டினதுக்கு அப்புறம் ஒரு போர்டு போட்டிருந்தாங்க.. "இங்கே பாறைகள் உருளலாம்" அப்படின்னு எழுதியிருந்தது.. என்னடா சொல்றாங்கன்னு!! மேல அன்னாந்து பார்த்தா ஒரு மாதிரி வளைஞ்சு எந்நேரமும் நம்ம மேல விழுந்தடறமாதிரி தான் இருந்தது அந்த இடத்துல இருந்த மலை..

ஹெ ஹேய்.. இதெல்லாம் நமக்கு ஜுஜுப்பி அப்படின்னு எல்லாரும் பேசிட்டே திரும்பவும் வண்டியை ஸ்டார்ட் பண்ணிட்டோம்.. வழி முழுவதும் நிறைய டீ எஸ்டேட் இருந்தது.. ரொம்ப அழகான இயற்கைக் காட்சிகள்.. சொல்லும் போதே கண்ணு முன்னால வந்து நிக்குது.. இங்க யானை நடமாட்டம் இருக்கு.. சிறுத்தை நடமாட்டம் இருக்குன்னு நிறைய பலகைகள் வச்சிருந்தாங்க.. வேற பொழைப்புல்ல.. ரோட்டோரத்துல எதையாவது நட்டு வைக்கனும் இவங்களுக்கு.. யாரைப் பயப்படுத்தறானுங்க அப்படின்னு பேசிட்டே என்னோட நண்பன் கல்யாணம் நடக்கற கிராமத்துக்குப் போயிட்டோம்..

நாங்க போய்சேர்ந்த நேரம் மாலை ஆறு மணி.. அடுத்த பத்து நிமிசத்துலயே வானம் இருட்டிடுச்சு.. அந்த இடத்தில் இருந்த 6 வீடுகளைத் தவிர எதுவும் கண்ணுக்குத் தெரியல.. அன்னைக்கு நைட் 7 மணிக்குதான் நண்பனுக்கு நிச்சயம் பண்றதா இருந்தாங்க.. எங்களுக்கு அங்க தங்க ஒதுக்கியிருந்த வீட்ல போய் குளிக்கலாம்னு தண்ணியைத் தொட்டா.. சும்மா சாக் அடிச்சா மாதிரியாயிடுச்சு... அவ்லோ ஜில்லுன்னு இருக்கு.. அன்னைக்கு அதுதான் கடைசி தடவை நான் அந்த பூதத்தைத் (தண்ணிதான்) தொட்டது..

7 மணி ஆயிடுச்சு.. எல்லாரும் கூடியிருந்தாங்க.. அந்த கிராமத்து நாட்டாமை வந்தாரு.. நம்ம ஊர் பொண்ணை பழனியை சேர்ந்த இவரு கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறாரு.. உங்களுக்கெல்லாம் சம்மதமா.. அப்படின்னு அங்க உக்காந்து இருந்தவங்களைப் பார்த்து மூன்று முறை உரக்கக் கேட்டாரு.. எல்லாரும் மூன்று முறையும் சம்மதம்னு சத்தமா சொன்னாங்க.. எங்களுக்கெல்லாம் ஒரே கேலியா இருந்தது அந்த செய்கைகள்.. அந்த நாட்டாமையையும் அங்க நடக்கற நிகழ்ச்சிகளையும் குரூப்பா கிண்டல் பண்ணிட்டு உக்காந்திருந்தோம்..

திடீர்னு அங்க வீடுகள்ல கட்டியிருந்த நாய்கள் எல்லாம் குலைச்சதுங்க.. உடனே கிராமத்து ஜனங்க எல்லாம் பாரு பாரு வருதான்னு பேசிக்கிட்டாங்க.. என்னடா நாய்க்குப் போய் இந்த ஃபிலிம் காட்டறாங்களேன்னு நாங்க சிரிச்சா.. தம்பி சிறுத்தை வருதுப்பா.. எல்லாரும் ரூமுக்கு போங்கன்னு சொல்றாரு நாட்டாமை.. எப்படி இருந்திருக்கும்.. கப்சிப்னு ஆயிட்டோம்.. அப்போதான் அந்த கிராதகன் என்னோட மாப்பிள்ளை நண்பன் பக்கத்துல வந்து ஆமாண்டா அவங்க சொல்றது உண்மைதான்.. நேத்து அதோ அந்த மூனாவது வீட்ல இருந்த ரெண்டு நாய்களை சிறுத்தை தூக்கிட்டு போயிடுச்சாம்.. அப்படிங்கறான்.. எல்லாரும் கதிகலங்கி திருதிருன்னு முழுச்சுக்கிட்டே பார்த்துட்டு இருந்தோம்..

சிறுத்தை எல்லாம் வரல.. சும்மா நாய் குலைச்சிருக்குப்பா வந்து உக்காருங்கன்னு நாட்டாமை கூப்பிட்டார்.. நண்பர்கள் எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு வந்து உக்காந்தோம்.. அதுக்கு அப்புறம் வாய் பெவிக்கால் ஒட்டினமாதிரி ஆயிடுச்சு எங்க எல்லாருக்கும்.. ஆனா அங்க இருந்த ஜனங்க தொடர்ந்து கிண்டலும் கேலியுமா பேசிட்டு இருந்தாங்க.. இப்பதான் சிறுத்தை வருதுன்னு எல்லாரும் ஓடினாங்க.. அடுத்த நிமிசமே ரிலாக்ஸ் ஆயிட்டாங்களேன்னு இருந்தது எங்களுக்கு..

பங்சன் முடிஞ்சது.. எங்களுக்கு ஒதுக்கியிருந்த வீட்டுக்குப் போயிட்டோம்.. இப்ப எல்லாரும் சகஜ நிலைக்கு வந்துட்டோம்.. கல்யாணத்துக்கு வந்திருந்த இன்னொரு கோஷ்டிகளோட சேர்ந்துக்கிட்டு சீட்டு விளையாட்டிட்டு தூங்கிப்போயிட்டோம்.. நைட் 3 மணி இருக்கும் கதவு தட்டின சத்தம் கேட்டுச்சு.. என் நண்பன் ஒருத்தன் போய் கதவைத் திறந்தான்.. ஏப்பா இப்போ காட்டுப்பன்னிங்க கூட்டம் கூட்டமா சுத்துது.. ஒன்னுக்குப் போகனும்னுட்டு எல்லாம் வெளிய வந்துடாதீங்க.. அப்படின்னார் ஒருத்தர்.. நாங்க பாட்டுக்கு தூங்கிட்டு இருந்தோம்.. எழுப்பி இந்தாளு இப்படி சொல்லிட்டு போறாரேன்னு பேசிக்கிட்டு இருக்கப்போ.. கதவை என்னமோ சுரண்டர மாதிரி ஒரு சத்தம்.. எல்லாரும் திரும்பவும் கப்சிப்னு ஆயிட்டோம்.. ரொம்ப நேரம் என்னமோ கதவை சுரண்டிட்டே இருந்தது.. அது நிஜமா என்னன்னே எங்களுக்குத் தெரியல..


அடுத்த நாள் கல்யாணத்துக்காக சீக்கிரமாவே எல்லாரும் ரெடியாயிட்டோம்.. வீட்டுக்கு வெளிய வந்து பார்த்தா.. எவ்ளோ அருமையான இடம் அது.. முந்தின நாள் அங்க வந்து ரீச் ஆகறப்போ பகல் மங்கியிருந்ததால சரியா அந்த இடம் கண்ணுக்குத் தெரியல.. அந்த இடத்தை சுத்தி சுத்தி பெரிய பெரிய பச்சைப் பூவால அலங்காரம் பண்ணினா மாதிரி டீ எஸ்டேட்டுகள்.. அவ்வளவு அருமையான இடம்.. ரொம்ப நெருக்கமா அப்போதான் டீ எஸ்டேட்களைப் பார்க்கறேன்.. அதுக்குள்ள நடந்து பார்த்தா நம்ம நாட்டாமை வந்துட்டார்.. தம்பி இதுக்குள்ள நிறைய அட்டைகள் இருக்கும்பா.. உடம்புல ஒட்டிகிட்டா நிறைய இரத்தத்தை எடுத்திடும் வெளிய வந்திடுங்க அப்படிங்கறார்.. இவருக்கு வேற வேலையே இல்லைன்னுட்டு வந்துட்டோம்..

அங்க பக்கத்து எஸ்டேட்டுல இருந்த சின்ன கோயில்ல கல்யாணம் நடந்தது.. எவ்வளவு அழகா கல்யாணம் பண்றாங்க.. இப்போல்லாம் சிட்டியில கல்யாணம் முடிக்கனும்னா பணம் அது இதுன்னு எவ்வளவோ தொந்தரவுகள் இருக்கு.. எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணி கல்யாணத்தை நடத்தினா.. கல்யாணத்துக்கு வந்த யாராவது கோவிச்சுட்டு மூஞ்சியைத் தூக்கி வைச்சிட்டு இருப்பாங்க.. அவங்களை சமாதானப்படுத்தனும்.. ஆனா இங்க எல்லாரோட முகத்துலயும் அவ்வளவு சந்தோசம்.. அந்த இளம் ஜோடிகளை எல்லாரும் மனசார வாழ்த்தினாங்க.. உண்மையில அப்படி எல்லாருக்கும் வாழ்த்துக்கள் கிடைக்கறதில்லை..

ரொம்ப எளிமையான கல்யாணம்.. இப்போ மதியமும் சாப்பிட்டாச்சு.. சாயந்திரம் மணி நாலாயிடுச்சு.. கிளம்ப வேண்டியதுதான்..

நாங்க எல்லாரும் அங்க மொத்தமாவே 22 மணிநேரம்தான் இருந்தோம்.. ஆனா ரொம்ப பழகிடுச்சு அந்த இடம்.. சுத்தமான காற்று.. கபடமற்ற மக்கள்.. அந்த இடத்தை விட்டு வர மனசே இல்லை..

சிறுத்தை, காட்டுப்பன்னி, யானைன்னு அங்க வாழ்ற மக்களுக்கு பல தொந்தரவுகள்.. சாயந்திரம் ஆறு மணிக்கு மேல வெளிய போறது ரொம்ப ரிஸ்க்.. ஏதாவது காரணத்தால கரண்ட் கட்டாயிடுச்சுன்னா சரிசெய்ய ஒரு வாரம் ஆகுமாம்.. அங்க இருக்கற சூழ்நிலைகளால பெரும்பாலான மக்களால படிக்க முடியல.. ஆனா எஸ்டேட் முதலாளிங்க அவங்களுக்கு தேவையானதைப் பார்த்துக்கறாங்களாம்.. அவங்களுக்கு வழிவழியா வர்ற சந்ததிகளுக்கும் எஸ்டேட்தான் உலகமாயிருக்கு.. இருந்தாலும் அந்த வாழ்க்கையோட நாமளும் இணைஞ்சிடலாமான்னு ஒரு எண்ணம் எல்லாத்துக்கும் வந்துச்சு.. கிளம்பிட்டோம்..

நாட்டாமைகிட்ட ஒரு வார்த்தை போயிட்டு வர்றோம்னு சொல்லலாம்னு போனோம்.. தம்பி ஆறு மணிக்குள்ள மலையை விட்டு இறங்கிடுங்க.. இல்லைனா ரோட்ல யானை வந்து குறுக்க நின்னுக்கும்.. அப்புறம் அது எப்ப போகுதோ அப்பதான் நீங்க போகமுடியும்.. தப்பித்தவறி அது கண்ணுல பட்டீங்கன்னா தீர்ந்தீங்கன்னு சொன்னார்.. இப்போ நாங்க எல்லாரும் ரொம்ப மரியாதையா சரிங்க அப்படின்னுட்டு வந்துட்டோம்.. கண்டிப்பா இங்க திரும்ப வரணும்டா அப்படின்னு எல்லாரும் பேசிக்கிட்டோம்..

மலைப்பாதையில கீழே இறங்கிட்டு இருக்கோம்.. அதே பலகைகள்.. ஆனா இப்போ அந்த இடங்களைக் கிராஸ் பண்றப்போ எல்லாம்.. ஒவ்வொருத்தரும் ஆட்டோமேட்டிக்கா சுத்திமுத்தி கவனமா பார்த்துட்டே வண்டி ஓட்டினோம்.. பாறைகள் உருளும் இடம் வந்ததுமே.. கவனமா வண்டியை நிப்பாட்டிப் பார்த்துட்டு அப்புறம் கிளம்பினோம்.. ஊருக்கு வந்துட்டோம்..

பைக்ல வந்ததால 4.30 மணி நேரம் ஆச்சுன்னு நினைக்கிறேன் ஊருக்கு வர.. மணி இப்போ நைட் 8.30.. நம்ம ஊர் ஜனங்க எல்லாரும் எந்த பயமும் இல்லாம.. ஹாயா ரோட்ல நடந்துட்டு இருந்தாங்க.. ஆமாம் இங்க சிறுத்தை வராதுல அப்படின்னு தோணுச்சு லூசுமாதிரி..

சாயந்திரம் 6 மணி ஆனா வெளிய வரக்கூடாதா.. நம்மளால எல்லாம் அங்க இருக்க முடியாதுப்பா இதுதான் நமக்கு சரின்னு தோணுச்சு ஊரைப் பார்த்தவுடனே..



Wednesday, August 25, 2010

பதிவுலகில் நான் - தொடர் பதிவு


இதுவரைக்கும் இந்த தொடருக்கு ஓட்டு மட்டுமே போட்டுட்டு இருந்த என்னைத் தொடரக்கூப்பிட்ட நண்பர்.. பிரியமுடன் ரமேஷ் மற்றும் அதை படிச்சுட்டு இருக்கற நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்..
 

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பதிவுலகில் பாபுன்னு வைச்சிருக்கேங்க..

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பேருதாங்க.. நண்பர்கள் என்னைப் பெரும்பாலும் அப்துல்காதர்னு கூப்பிடுவாங்க.. வீட்ல என்ன பாபுன்னு கூப்பிடுவாங்க.. ஏனோ என்னை பாபுன்னு கூப்பிட்டா ரொம்ப பிடிக்கும்.. அதுக்காக அப்துல்காதர்னு கூப்பிட்டா பிடிக்காதான்னு மடக்காதீங்க..

ஆக்சுவலா "பதிவுலகில் நான்" அப்படின்னுதான் என்னோட வலைப்பதிவுக்கு பேர் யோசிச்சு வச்சிருந்தேங்க.. சரி எதுக்கும் வேற யாராவது இந்தப் பெயரை வைச்சிருக்காங்களான்னு கூகுள்ல சர்ச் பண்ணினா இதே பெயர்ல நிறைய தொடர் பதிவுகள்.. அதனால இப்ப இருக்கற பெயரைத் தேர்வு செய்துட்டேன்.. நல்லாயிருக்குள்ள..

இப்போ அதே தொடர்ல நானும் எழுதறது இன்னும் சந்தோசமா இருக்கு..

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி?

வலைப்பதிவுகளைப் படிக்கறதுக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஆனா நானே இந்தப் வலைப்பதிவு எல்லாம் எழுதுவேன்னு நினைச்சே பார்க்கலைங்க.. என்னோட நண்பர் ரமேஷ்தான் எனக்கு ஊக்கம் கொடுத்தார்.....சோ எழுதிட்டேன்...

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எல்லாரும் செய்ற மாதிரி இன்ட்லி, தமிழ் 10, இனியதமிழ் இப்படி எல்லா தளங்களையும் பயன்படுத்திக்கறேன்.. ஆனா இன்னும் பிரபலம் எல்லாம் ஆகலைங்க..

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ம்ம்ம்.. ஆமாங்க நிறைய பகிர்ந்துக்கறேங்க.. நமக்கு பிடிச்ச.. நம்ம மனசுல நிக்கற விசயங்களை நம்ம நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கறதுல உண்மையிலயே ரொம்ப சந்தோசமா இருக்குங்க..

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

முதல்ல ஒரு பொழுதுபோக்குக்காகத்தாங்க பிளாக் படிக்கவே ஆரம்பிச்சேன்.. ஆனா எழுதறப்போ அப்படி ஃபீல் ஆகலை.. ஏதாவது நல்ல தகவல்களைத் தரமுடியுமான்னு முயற்சி பண்ணீட்டு இருக்கேன்..

7)  நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஓ.. இப்படி வேற செய்யலாமா.. ஏற்கனவே டமிழ்ல ஒரு வலைப்பதிவு எழுதிட்டு இருக்கேன்னு உங்களுக்கே தெரியும்.. தங்கிழிஷ்ல இனி ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்..

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

அப்படி குறிப்பிட்டு சொல்ற மாதிரி எல்லாம் இல்லைங்க.. ஆனா இங்க சில பேர் பிரபலமாகறதுக்காக பொய்யான தகவல்களைக் கொடுக்கறாங்க.. நாமளும் நம்ம இனம்தானேன்னு அப்படியே நம்பிடறோம்.. அதுமட்டும் தாங்க இங்க ஒரே குறையா நினைக்கிறேன்..

9) உங்கள் பதிவைப் பற்றி முதன் முதலில் உங்களை தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

ம்ம்ம்.. கண்டிப்பா முதல் பதிவுக்கு கிடைச்ச பாராட்டுகள் ரொம்ப சந்தோசமா இருந்ததுங்க.. அதுவும் முதல் பதிவாக.. என்னைப் பற்றி சுருக்கமா ஒரு அறிமுகம் குடுத்தேன் அவ்லோதான்.. அதையும் பாராட்டி என்னை ஊக்குவித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்..

ஒரு பதிவருக்கு கிடைக்கிற பாராட்டுகள்தான் அவரது பதிவுகளை மேம்படுத்தும்னு அப்போ நல்லா புரிஞ்சது.. அதுலயிருந்து நல்ல பதிவுகளை நானும் பாராட்டவும் ஓட்டு போடவும் மிஸ் பண்றதே இல்ல..

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

இந்த வலைப்பதிவு முழுக்க நான் என்னைப்பத்தி தாங்க எழுதி வச்சிருக்கேன்.. நேரம் கிடைக்கறப்போ படிச்சுப்பாருங்க..

இந்த தொடரை எழுத வாய்ப்பளித்த, படித்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள்..


Tuesday, August 24, 2010

இன்செப்சன் - 2007 (இது விமர்சனமல்ல)

நான் ஒரு பெரிய மலை மேல நின்னுட்டு இருக்கேன்.. மேகம் முழுக்க பயங்கர கருப்பா இருந்தது.. திடீர்னு வானத்துல இருந்து ஒரு பெரிய கருப்பு சூறாவளி உருவாச்சு.. ஆங்கிலப் படங்கள்ல வருமே வானத்துல இருந்து சுழன்றுகிட்டே கீழே இருக்கறதை எல்லாம் சுழற்றி தூக்கிட்டுப் போய்டுமே அந்தமாதிரி பெரிய சூறாவளி.. அப்புறம் என்ன சுத்தி நிறைய அந்த மாதிரி உருவாச்சு.. என்னடா இதுன்னு திகிலா நான் பார்க்கறேன்.. அதுல ஒரு சூறாவளி என் பக்கத்துல வந்து கிராஸ் பண்ணிப் போச்சு.. எனக்கு அதைப் பார்த்தவுடனே பக்குன்னு ஆயிடுச்சு.. அந்த சூறாவளியில கருப்பா தெரிஞ்சது பூறா கருப்பு கலர் நாய்ங்க.. அவ்வளவும் நாய்ங்க.. அய்யய்யோன்னு நினைச்சுட்டு நான் நிக்கற இடத்துல இருந்து ஓடிடலாம்னு கீழே பார்க்கறேன்.. இன்னும் பயங்கரமான ஷாக்..

நான் நின்னுட்டு இருக்கறதே அந்த மாதிரி ஒரு சூறாவளியோட டாப்லதான்.. என் காலடியில பூறா நாய்கள் சுழன்றுகிட்டு இருக்கு.. அவ்ளோதான்.. என்னைக் கடிக்க வந்த எல்லா நாய்களையும் கத்திக்கிட்டே சுத்தி சுத்தி உதைச்சேன்.. என்ன ஒரு திரில்லிங்.. திடீர்னு டேய்ய்ய்ய்ன்னு ஒரு பெரிய சத்தம்.. கட்..

எனக்கு படம் பார்க்கறதுன்னா ரொம்ப பிடிக்கும்.. அதுலயும் பேய் படம், மாயாஜாலப்படம், ஆக்சன் படம்னா ரொம்ப இஷ்டம்.. ஆனா நைட்ல உக்காந்து பேய் படம் பார்த்துட்டு நைட் முழுக்க பேய் கனவு கண்டுட்டு கனவுலையும் பயந்துட்டு இருப்பேன்.. ஹி..ஹி..ஹி.. அதேமாதிரி ஆக்சன் படம் பார்த்தன்னா அன்னைக்கு கனவு முழுக்க ஒரே சண்டைதான்.. பின்னியெடுத்துடுவேன்..

ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை வேற வேலை எதுவுமே இல்லாததால.. காலைல "Lord of the rings" படம் பார்க்க ஆரம்பிச்சேன்.. எனக்கு பேண்டசி படங்கள்னாதான் ரொம்ப இஷ்டம்.. படம் ரொம்ப புடிச்சுப் போக.. அன்னைக்கு நைட்டு தூங்கறதுக்குள்ள அதோட மூனு படத்தையும் பார்த்துட்டேன்..

படம் சூப்பர்.. படம் முழுக்க ஒரே மாயாஜாலம்.. ஆவி.. அது இதுன்னு வந்துட்டே இருந்தது.. ஆனா பயப்படறமாதிரி படமெல்லாம் கிடையாது அது.. நிறைய புதுமாதிரியான உயிரினங்களைக் காமிச்சிருப்பாங்க.. நைட் ஆயிடுச்சு... தூங்கிட்டேன்.. கட்..

டேய்ய்ய்ய்ய்ய்ன்னு ஒரு பெரிய சத்தம் கேட்டது.. ஆஹா!! யாரோ உதவி பண்ண வர்றாங்கன்னு தெம்போட உதைக்க ஆரம்பிச்சேன்.. திடீர்னு கண்ணு முன்னாடியே எல்லாமே மறைஞ்சுடுச்சு.. கட்..

முழிப்பு வந்துடுச்சு.. இல்ல முழிக்க வைக்கப்பட்டேன்.. என்னோட நண்பர்கள்தான் கத்தியிருக்காங்க.. அவங்களுக்கெல்லாம் செம உதை போல..

ஹி.. ஹி.. ஹி.. கனவா..

Friday, August 20, 2010

பெங்களூரு ஜீவனா..

 தினமும் இப்படி டிராஃபிக் இருந்தா எப்படி ஆபிஸ் போறது!!
பெங்களூர் வாழ்க்கை அப்படிங்கறதுதான் இந்தப் பதிவோட தலைப்பு..

ஆக்சுவலா இந்த பதிவு.. இங்க எவ்வளவு இடங்கள் சுத்திப் பார்க்க இருக்கு.. அப்படிங்கறதைப் பத்தி இல்ல.. இங்க இருக்கறவங்க எதை விரும்பறாங்க.. இங்க இருக்கும் போது நமக்கு என்னென்ன அனுபவங்கள் கிடைக்கும் அப்படிங்கறதைத் தான் சொல்ல முயற்சி பண்றேங்க..

பெங்களூருக்கு முதன் முதலா வர்றவங்களுக்கு எந்த அனுபவம் கிடைக்குதோ இல்லையோ டிராஃபிக் அனுபவம் கண்டிப்பா கிடைக்கும்.. பஸ்ல டிராவல் பண்றப்போ ஒரு ஸ்டாப்பிங்ல இருந்து அடுத்த ஸ்டாப்பிங் போறதுக்கே 1 மணி நேரம் எல்லாம் ஆயிருக்கு.. அதனால இங்க வேலைக்குப் போறவங்களுக்கு பைக் இருந்தாதான் ரொம்ப செளகரியமா இருக்கும்.. பெங்களூர்ல பைக் ஓட்டிட்டா நீங்க எந்த நகரத்துக்கு வேணாலும் போய் வண்டி ஓட்டலாம்னு.. எல்லாரும் சொல்ற மாதிரி நானும் சொல்லலை.. ஆனால் நீங்க ஒரு தேர்ந்த பைக்கர் ஆயிடுவிங்க..

டிராஃபிக்குக்கு பயந்து பைக் வாங்கிட்டோம்.. அப்போ அடுத்த ஸ்பெசல் இங்க இருக்கற டிராஃபிக் போலீஸ்தான்..

அந்நியன் படத்துல வர்ற விக்ரம் மாதிரி என்னதான் டிராஃபிக் ரூல்ஸ் மீறாம இங்க வண்டி ஓட்டினாலும்.. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல சின்னதா ரூல்ஸ் மீற வேண்டிய சந்தர்ப்பம் வரும்.. உதாரணமா நமக்கு முன்னாடி இருக்கற பஸ்சைக் கடந்துட்டோம்னா ஃப்ரீ லெஃப்ட்டுல நீங்க போயிடற மாதிரி இருக்கும்.. ஆனா நீண்ட நேரமா அதே இடத்துல டிராஃபிக் காரணமா நின்னுட்டே இருப்போம்.. நமக்கு பின்னாடி வர்றவங்க எல்லாம் பக்கத்துல இருக்கற ஃபிளாட்பாம்ல லைட்டா ஏறி அந்த பஸ்சைக் கடந்து ஃப்ரீ லெஃப்ட் எடுத்து போயிட்டே இருப்பாங்க.. நாமளும் எவ்வளவு நேரம்தான் பொறுமையா பார்த்துட்டே இருக்கறது.. சரி நாமலும் செஞ்சுதான் பார்ப்போமே அப்படின்னு அவ்வழியே கடைபிடிப்போம்.. நாளடைவில் இது பழக்கமாயிடும்..


ஆனா அந்த சமயத்துல உங்களுக்கு நல்ல நேரம் இருக்கணும்.. ஏன்னா இங்க இருக்கற டிராஃபிக் போலிஸ் எல்லாரும் ரோட்ல நின்னு டிராஃபிக்கை கிளியர் பண்ண மாட்டாங்க.. அப்படி அவங்க வேலையைப் பார்த்துட்டு இருந்தாங்கன்னா நமக்கு இந்த மாதிரி சூழ்நிலையே வராது.. ஆனா அவங்க ஏதாவது மரத்துக்குப் பின்னாடி அவங்க பைக்கைப் பார்க் பண்ணி மறைஞ்சு உக்காந்துக்கிட்டு இப்படி எவனாவது ரூல்ஸ் பிரேக் பண்ரானான்னு பார்த்துட்டே உக்காந்துருப்பாங்க.. சில இடங்கள்ல பார்த்தோம்னா ரோட்ல ரெண்டு சைடுலயுமே மறைஞ்சு உக்காந்துருப்பாங்க.. யாரும் தப்பிடக்கூடாது பாருங்க அதான்.. அன்னைக்கு நீங்க பலிகடான்னா திடீர்னு ஓடிவந்து கண்ணிமைக்கிற நேரத்துல உங்க பைக் சாவியை எடுத்துட்டு போயி அவங்க பைக்ல உக்காந்துடுவாங்க.. நாம மறுபேச்சு பேசாம 100 ரூபாய் கொடுத்தாதான் சாவி கொடுப்பாங்க.. என்ன செய்றது.. மனசு வலிக்க காசக்கொடுத்திட்டு சாவியை வாங்கி வரவேண்டியிருக்கும்.. இப்படி மாட்டிட்டோம்னா.. ச்சே.. கரெக்டா ரூல்ஸைக் கடைபிடிச்சிருந்தா இப்படி ஆயிருக்குமான்னு நம்மளைத் திட்டிக்குவோம்.. ஆனா என்ன பண்றதுங்க.. ஆபிஸ் போற அவசரம்.. அப்படி.. இப்படின்னு ஆயிரம் காரணங்களால இப்படி நடந்துடுது..

அப்புறம் இங்க இருக்கற பெரிய பிரச்சினை பார்க்கிங்.. ஒவ்வொரு ஏரியாவிலும் பார்க்கிங்க்கு ஒரு பகுதியை அலாட் பண்ணியிருந்தாங்கன்னா பிரச்சினையே இல்ல.. அப்படி ஏதும் இல்லாததால கிடைக்கிற இடத்துல பைக்கை நிப்பாட்டிட்டு பயந்துட்டே நம்ம வேலையைப் பார்க்க போவோம்.. இதுல ஏதாவது தப்பான இடத்துல நிப்பாட்டிடோம்னா.. போலிஸ்காரங்க.. ஒரு லாரியை எடுத்துட்டு வந்து.. கிடைக்கிற வண்டிகளை எல்லாம் அப்படியே தூக்கிட்டு போயிடுவாங்க.. அதுவும் அவங்க தூக்கற ஸ்டைல் இருக்கே.. பைக் வைச்சிருக்கவங்க பார்த்தா கண்ணுல தண்ணி வந்துடுங்க.. முன்சக்கரத்தை ஒரு சங்கலில கோத்து நாய் கழுத்தைப் பிடிச்சு தூக்கற மாதிரி அப்படியே தூக்குவாங்க.. இப்படி வேற ஒருத்தர் வண்டிகளைத் தூக்கறதைப் பார்க்கறதுக்கே பகீர்னு இருக்கும்.. நம்ம வண்டி கண்ணுல ஃப்ளாஷ் அடிக்கும்..

இங்க பைக் எங்காவது மிஸ் ஆயிருந்தா.. திருடு போக சான்ஸ் ரொம்ப கம்மிதான்.. இங்க இருக்கற போலிஸ்காரங்கதான் தூக்கியிருப்பாங்க.. அங்க போனா.. வண்டியை தூக்க அவங்க வச்சிருக்கற ஆளுங்ககிட்ட தான் போய் பேசணும்.. அங்க இன்சார்ஜா இருக்கறவர்.. ஒரு ஓரமா நின்னு பார்த்துட்டு இருப்பார்.. அவங்க டீலுக்கு ஒத்து வந்தா.. தூக்கறவங்களுக்கு 100 ரூபாய்.. இன்சார்ஜுக்கு 200 ரூபாய்.. அப்புறம் என்ன கண்டிப்பா அவங்க டீலுக்கு ஒத்து வந்தே ஆகணும்..

சரிங்க இந்தக்கதை போதும்.. வேற என்ன சொல்லலாம்.. ம்ம்ம்...

இங்க இருக்கற ஹோட்டல்ல முதல் தடவை சாப்பிட்டோம்னா.. அட.. அட.. அட.. சூப்பரா இருக்கும் போங்க.. ரொம்ப புகழரேன்னு நினைக்காதிங்க.. இங்க சாம்பார்ல இனிப்பு போடாறாங்களாம்.. அதனால சாம்பார் ஊத்தி சாப்பிட்டா இனிப்பா இருக்கும்.. வேற என்ன செய்றது.. சாப்பிட வேண்டியதுதான்.. நோ அதர் ஆப்சன்..

சரிங்க.. உங்களை ஃபோர் அடிக்காம இத்தோட முடிச்சுக்கறேன்..

பெங்களூரைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா இதையும் படிங்க..




Wednesday, August 18, 2010

கணினியில் உங்கள் தகவலை மறைக்க வேண்டுமா?

 

கம்ப்யூட்டர் பயன்படுத்தற எல்லாருமே ஏதாவது காரணங்களால சில கோப்புகளை யாருக்கும் தெரியாம வைச்சிருக்கணும்னு விரும்புவோம்.. கோப்புகளை மறைச்சி வைக்க பல வழிகள் இருக்கு.. அப்படி கோப்புகளை இரகசியமா வைச்சிக்கறதுக்கு நான் பயன்படுத்திட்டு இருக்கற மென்பொருள் பேரு My Lockbox..

இது மிகவும் எளிமையான இன்ஸ்டாலேசன் பிராசஸ் தான்.. இதோட செட்-அப்ப பதிவிறக்கம் பண்ணிட்டு இன்ஸ்டால் பண்ண ஆரம்பிக்கணும்.. இன்ஸ்டாலேசன் பிராசஸ்ல கீழே கொடுத்திருக்கற விண்டோ வர்றதுக்கு ரெண்டு முறை நெக்ஸ்ட் பட்டனை அழுத்த வேண்டியிருக்கும்..
இந்த ஸ்க்ரீன்சாட்ல இருக்கற மாதிரி பாஸ்வேர்ட் கொடுக்கிறோம்.. இந்த பாஸ்வேர்ட்தான் நாம புரொடெக்ட் பண்ணப் போற போல்டரோட பாஸ்வேர்ட்.. அப்புறம் "Enter your password hint" அதுல நம்ம பேரோ.. இந்த மாதிரி நம்பர்சோ எதாவது டைப் பண்ணிக்கலாம்.. அப்புறம் நெக்ஸ்ட்..

அடுத்து வர்ற விண்டோ.. கீழே கொடுத்திருக்கற விண்டோ மாதிரி இருக்கும்..
நார்மலா இதுல C:\My Lockbox அப்படின்னு தான் காமிக்கும்.. இங்கதான் நாம கோப்புகளை சீக்ரெட்டா வைக்க வேண்டிய இடத்தையும் அதோட போல்டர் பெயரையும் கொடுக்கணும்.. நான் சீக்ரெட்டா வைக்க வேண்டிய போல்டர் D:\Abdulkadher A.

அவ்வளவுதான் இன்ஸ்டாலேசன் பிராசஸ் ஓவர்.. இப்போ டெக்ஸ்டாப்ல கிரியேட் ஆயிருக்கிற மை லாக்பாக்ஸ் அப்படிங்கற ஐகானைக் கிளிக் பண்ணினா கீழே கொடுக்கப்பட்டிறுக்கிற மாதிரி பாக்ஸ் விண்டோ ஓப்பன் ஆகும்..
இங்க நாம ஏற்கனவே டிசைட் பண்ணியிருக்கிற "பாத்"தைக் கொடுத்து செட் பட்டனைக் கிளிக் பண்ணினா.. நம்ம போல்டர் டிசபிள் ஆயிடுச்சுன்னு மெசேஜ் வந்திடும்.. இப்போ எல்லா வேலையும் ஓவர்..

இப்போ நீங்க அந்த போல்டரைப் பார்க்கனும்னு விரும்பினா.. மை லாக்பாக்ஸ் ஐகானைக் கிளிக் பண்ணினா பாஸ்வேர்ட் கேக்கும்.. பாஸ்வேர்ட் குடுத்த உடனே டைரக்டா அந்த போல்டரை உங்களுக்கு ஓப்பன் பண்ணிக்கொடுத்திடும்.. சிஸ்டம் ட்ரேல ஒரு சின்ன பூட்டு ஒன்னு லாக் ஓப்பனாயிருக்கற மாதிரி காமிச்சா அந்த போல்டர் ஓப்பன் ஆயிருக்குன்னு அர்த்தம்.. உங்க பயன்பாடு முடிஞ்சவுடனே அந்த சிஸ்டம் ட்ரேல காமிக்கற பூட்ட கிளிக் பண்ணி திரும்பவும் போல்டரை மறைச்சிடலாம்.. ஒரு வேளை நீங்க மறுபடியும் லாக் பண்ண மறந்துட்டு கம்ப்யூட்டரை Shutdown பண்ணிட்டாலும் மை லாக்பாக்ஸ் தானாகவே போல்டரை ஹைட் பண்ணிக்கும்.. அடுத்தமுறை நீங்க பாஸ்வேர்ட் குடுத்தாதான் அந்த போல்டரைப் பார்க்கவும் திறக்கவும் முடியும்..

இந்த முயற்சியை பிரேக் பண்ணி அந்த போல்டரைப் பார்க்கறதுக்கு ஒரு வழி இருக்கு.. என்னன்னா இந்த மென்பொருளை Uninstall பண்றது மூலமா செய்யலாம்.. ஆனா இதை Uninstall பண்றதுக்கும் நாம் செட் பண்ணி வைச்சிருக்கிற பாஸ்வேர்ட் கொடுத்தாதான் முடியும்.. எப்பூடி..

இது ஒரு இலவச மென்பொருள் தான்..
பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் பண்ணுங்க..

இந்த மென்பொருள் உங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்னு நம்பறேன்..


பெங்களூருக்கே ஸ்வாகதா..

ஒரு மழை நாளில் பெங்களூர் சாலை

பெங்களூருக்கு வாங்க.. இதுதாங்க தலைப்போட அர்த்தம்..

வணக்கங்க.. நானும் பெங்களூர்ல ஒரு 4 வருசமா இருக்கறதால இங்க என்ன என்ன ஸ்பெசல்னு உங்களுக்கெல்லாம் சொல்லலாம்னு ஆசைப்படறேங்க..

பெங்களூருன்னாலே எல்லாருக்கும் ஞாபகம் வர்றது இங்க இருக்கற கிளைமேட் தாங்க.. பெங்களூர் கடல் மட்டத்துல இருந்து 949 மீட்டர் உயரத்துல இருக்கறதால இந்த கிளைமேட் இருக்கு.. பெரும்பாலும் இங்க எல்லா ரோடுகளுமே ஏத்த இறக்கமாத்தான் இருக்கும்.. இங்க மழை வர்றதுக்கு காலம் எல்லாம் இல்லைங்க.. திடீர் திடீர்னு வரும்.. ஒரு செப்டம்பர் மாசத்துலதான் நான் பெங்களூருக்கு புதுசா வந்தனா.. வெளியில போறப்ப எல்லாம் நனைஞ்சு போயிடுவேன்.. அப்புறம் நானும் இங்க இருக்கறவங்க மாதிரி ஜெர்கின் வாங்கிட்டேன்.. 

நம்ம பெங்களூருக்குப் பேரே தோட்ட நகரம் தான்.. பேருக்கேத்த மாதிரி எங்கப் பார்த்தாலும் கார்டனா இருக்கும் இங்க.. ஒவ்வொரு ஏரியாவிலும் குறைஞ்சது ரெண்டு பார்க்காவது இருக்கும்.. மார்னிங்கும், ஈவ்னிங்கும் பெரிசுங்க வாக்கிங் போகவும், சிறிசுங்க சைட் அடிக்கறதுக்கும் இந்த பார்க்கெல்லாம் ரொம்ப வசதியா இருக்கு..


நெக்ஸ்ட் கண்டிப்பா பொண்ணுங்க தாங்க.. இங்க இருக்கற பொண்ணுங்க எங்க இருந்து வர்றாங்கன்னே தெரியலங்க.. மேக்சிமம் பொண்ணுங்க உண்மையிலயே அழகா இருக்காங்க.. அதுவும் M.G. ரோடு பக்கம் போயிட்டம்னா வெவ்வேற மாநிலத்த சேர்ந்த பொண்ணுங்கள ஒட்டுக்கா பார்க்கலாம்.. இங்க நிறைய மாநிலங்கள சேர்ந்தவங்க வசிக்கறதால மல்டி கல்சரா இருக்கு.. அதனாலயோ என்னமோ இருக்கற பொண்ணுங்க ரொம்ப ஜோவியலா இருக்காங்க..

அப்புறம் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்.. பெங்களூர சுத்தி சுத்தி நிறைய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இருக்குங்க.. இங்க நிறைய மால் இருந்தாலும் மடிவாலான்னு ஒரு ஏரியால இருக்கற "ஃபோரமும்", பிரிக்கேட் ரோட்ல இருக்கற "கருடா மாலும்" இங்க ரொம்ப பேமஸ்.. இந்த ரெண்டு சாப்பிங் மால்கள்லையும் நிறைய தியேட்டர்ஸ் இருக்கறதால நிறைய லவ்வர்ஸ், அப்புறம் என்ன மாதிரி நல்ல பசங்கன்னு நிறைய பேரு வருவாங்க.. இந்த மால்கள்ல விக்கற ஒவ்வொரு பொருளும் யானை விலை, குதிரை விலை சொல்வாங்க.. நான் எதுவும் வாங்க மாட்டேங்கறது வேற விசயம்.. நிஜமா இங்க சுத்தறவங்க எல்லாம் ஏதாவது வாங்குவாங்களான்னே தெரியல.. எப்பப் பார்த்தாலும் அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துட்டே இருப்பாங்க.. எப்படி இங்க கடை வைச்சிருக்கறவங்களுக்கும் கட்டுப்பிடியாகுதுன்னே தெரியல..
மடிவாலா 'ஃபோரம்" மாலின் முன்பு
அடுத்து M.G. ரோடு.. இங்க பெங்களூருக்கு புதுசா வர்றவங்ககிட்ட எல்லாம் M.G. ரோடு போனா சூப்பரா இருக்கும்.. அப்படி இப்படின்னு இங்க இருக்கறவங்க எல்லாரும் கதை விடுவாங்க.. ஆக்சுவலா நானும் இப்ப வர்றவங்ககிட்ட அதைத்தான் செய்றேன்... பழக்கமாயிடுச்சுள்ள.. நான் புதுசா வந்தப்பையும் இப்படியே சொன்னாங்களா.. அங்க போய் அங்கிட்டும் இங்கிட்டும் பார்க்கறேன்.. ஒரு நீளமான ரோடுதான் இருக்கு.. அப்புறம் உள்ள நுழையறதுக்கே பயப்படற மாதிரி ரொம்ப காஸ்ட்லியான ஷோரூம்கள் இருந்தது.. அப்புறம் புரிஞ்சது நான் முன்ன சொன்னாமாதிரி பொண்ணுங்கள நினைச்சுதான் அப்படி எல்லாரும் சொல்லியிருக்காங்கன்னு.. மத்தபடி M.G. ரோடுங்கறது ஒரு ரோடுதான்.. வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..

ம்ம்ம்.. அப்புறம்... ம்ம்..ம்ம்.. வேற என்னெல்லாம் இருக்குன்னு யோசிச்சு சொல்றேங்க..


Tuesday, August 17, 2010

பதிவுலக நண்பர்களுக்கு நன்றி


பதிவு எழுத ஆரம்பிச்சு இன்னையோட 14 நாள் ஆகுதுங்க.. நம்ம வலைப்பதிவ பார்த்தவங்க எண்ணிக்கை இன்று ஆயிரத்தக் கடந்துடுச்சுங்க.. அதுலயும் 990 முதல் 1000 வர்ற வரைக்கும் இமைக்காம பார்த்துட்டே இருந்தேன் நான்.. ஆயிரமாவது நபர் பார்க்கறப்போ அவ்வளவு சந்தோசம் எனக்கு..

எனக்கு ஆதரவளிச்ச உங்க எல்லாத்துக்கும் முதல்ல என்னோட நன்றிங்க..

நான் முதல்ல பதிவு எழுதற ஐடியால எல்லாம் இல்லங்க.. ஆக்சுவலா பயம்.. என்னோட நண்பர் பதிவர் பிரியமுடன் ரமேஷ்தான் கண்டிப்பா நீ நல்லா பதிவுகள் எழுதுவ.. ஒரு வலைப்பதிவ ஆரம்பின்னு எனக்கு தைரியம் கொடுத்தார்.. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த வலைப்பதிவு.. நானும் இப்போ கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டுதான் வர்றேன்.. கண்டிப்பா நம்ம எல்லாத்துக்கும் பயனுள்ளதாக நல்ல பதிவுகளைக் கொடுக்க முயற்சி பண்றேங்க..

உங்க எல்லாத்துக்கும் என்னோட நன்றியை மறுபடியும் தெரிவிச்சுக்கிறேன்..